திருச்சியில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்…!!
திருச்சி உறையூர் ராமலிங்கநகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது 58). இவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் அதிகாலை ஆண்ட்ரூசுக்கு திடீர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவருடைய உடல் உறுப்புகளை தானம் வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை ஆஸ்பத்திரியில் ஆண்ட்ரூசின் உடலில் இருந்து 2 சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல், 2 கண்கள் ஆகிய 7 உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இதில் இதயம், நுரையீரல் ஆகிய 2 உறுப்புகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதற்காக இதயம், நுரையீரல் ஆகியவை நேற்று பகல் மருத்துவமனையில் இருந்து பாதுகாக்கப்பட்ட பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் விமானத்தில் ஏற்றப்பட்ட இதயம், நுரையீரல் ஆகியவை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
மற்ற உறுப்புகளான கல்லீரல் கோவை ஆஸ்பத்திரிக்கும் 2 சிறுநீரகத்தில் ஒன்று திருச்சிக்கும் மற்றொன்று மதுரை ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 2 கண்களும் திருச்சி ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த ஆண்ட்ரூஸ் உடல் உறுப்புகள் தானம் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர்.
Average Rating