இறந்த பசுவின் தோலை உரித்த விவகாரம்: ஆந்திராவில் தலித் சகோதரர்களை தாக்கிய 8 பேர் கைது..!!
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்துக்கு உட்பட்ட கமனகருவு கிராமத்தை சேர்ந்த நாராயண ராவ் மற்றும் கங்காதரராவ் ஆகியோருக்கு சொந்தமான பசு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனது. இதை அவர்கள் தேடிவந்த நிலையில், கடந்த 8–ந் தேதி இரவு அப்பகுதியை சேர்ந்த தலித் சகோதரர்கள் 2 பேர் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்ததும் தங்களது பசுவைத்தான் கொன்று தோலை உரிப்பதாக கருதி, நாராயணராவ், கங்காதரராவ் மற்றும் அவரது கிராமத்தை சேர்ந்த சிலர் தலித்துகள் இருவரையும் பலமாக தாக்கினர்.
உண்மையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேறொரு பசுவின் தோலையே அதன் உரிமையாளரின் அறிவுறுத்தலின் பேரில் புதைக்கச் சென்ற இடத்தில் அவர்கள் உரித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சகோதரர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த அமலாபுரம் போலீசார் நாராயணராவ், கங்காதரராவ் உள்பட 8 பேரை கைது செய்தனர். இருப்பினும் இந்த தாக்குதல் பசு பாதுகாவலர்களால் நடத்தப்பட்டது அல்ல என்று போலீஸ் தெளிவு படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தால் கோபமடைந்துள்ள முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு (பொறுப்பு) உத்தரவிட்டு உள்ளார். மேலும் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குமாறும், அவர்களது சிகிச்சைக்கான செலவுகளை ஏற்குமாறும் மாவட்ட கலெக்டருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்
Average Rating