இளம்பெண் கற்பழித்து கொலை: சாலியமங்கலத்தில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய குழு விசாரணை…!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகள் கலைச்செல்வி (20). இவரது தாயார் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து கலைச்செல்வி அம்மாப்பேட்டை அருகே உள்ள சாலியமங்கலத்தில் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த 31-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைதேடிய போது வீட்டின் பின்புறம் உள்ள கருவை மரக்காட்டில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது கழுத்தில் காயம் இருந்தது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இக் கொலை தொடர்பாக சாலியமங்கலம் புது காலனியை சேர்ந்த தொழிலாளி குமார், அவரது நண்பர் வெள்ளாள தெருவை சேர்ந்த அரங்கராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்த டெல்லியில் இருந்து தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய இயக்குனர் சந்திர பிரபா, விசாரணை அதிகாரி இனியன் ஆகியோர் தஞ்சை வந்தனர். சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்த அவர்கள் இன்று காலை 9 மணியளவில் சாலியமங்கலம் சென்றனர்.
இளம் பெண் கலைச்செல்வி கொலை தொடர்பாக அவரது தந்தை ராஜேந்திரன், பெரியம்மா பாப்பம்மாள் மற்றும் பொது மக்கள், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இளம் பெண் கொலை செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர்.
விசாரணையின் போது கும்பகோணம் சப்-கலெக்டர் கோவிந்தராவ், பாபநாசம் தாசில்தார் திருமால், டி.எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் விசாரணை குழுவினர் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையம் சென்று விசாரணை நடத்தினர். இக்கொலை தொடர்பாக யார்? யார்? கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது பின்னணி என்ன? என்பது குறித்து விசாரித்தனர். விசாரணை அறிக்கை டெல்லியில் தாக்கல் செய்யப்படுகிறது.
Average Rating