தாமதமான சிகிச்சையால் 10 மாத குழந்தை இறப்பு..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சுமிதா-ஷிவ் தத் தம்பதியின் 10 மாத ஆண் குழந்தையான கிருஷ்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதனால் அவர்கள் தங்கள் குழந்தை கிருஷ்ணாவை பஹ்ரைச் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக உள்நோயாளியாக குழந்தையை அனுமதிக்குமாறு கூறினார்.
ஆனால் குழந்தையை மருத்துவமனை பெட்டில் அனுமதிக்க நர்ஸ் மற்றும் துப்புரவு தொழிலாளி இருவரும் தம்பதியிடம் லஞ்சம் கேட்டனர். முக்கியமான ஊசி போடுவதற்கு மருத்துவ உதவியாளர் ஒருவர் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட, அக்குழந்தை இறந்து போனது. லஞ்ச விவகாரத்தால் குழந்தை இறந்து போன சம்பவம் உ.பி. மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், தாமதமான சிகிச்சையால் 10 மாத குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் பல மனித உயிர்கள் காக்கப்படும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க வழியில்லாத ஏழைகளின் நிலைமையை கேள்விக்குள்ளாக்கி விடும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating