10 அடி பள்ளத்தில் தவமிருந்த விசுவ இந்து பரிஷத் நிர்வாகி..!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சின்ன அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணன் (வயது 55). விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அறந்தாங்கி நகர செயலாளராக இருந்து வரும் இவர், சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து கடந்த 2-ந் தேதி ஆடி அமாவாசையையொட்டி அறந்தாங்கி வடுகாடு சுடுகாட்டு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய அவர், அரை நிர்வாணத்தில் அதற்குள் அமர்ந்து சிவபெருமானை நினைத்து தனது தவத்தை தொடங்கினார். அவர் தவம் மேற்கொள்வது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாருக்கும் தெரியாது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துகிருஷ்ணன் தவம் மேற்கொண்டு வருவதை அறிந்த பொது மக்கள் இது குறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு முத்துகிருஷ்ணன் அரை நிர்வாணத்தில் தவம் மேற்கொண்ட நிலையில் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் தவத்தை கைவிடுமாறு கூறினர். இதையடுத்து நேற்று அதிகாலை முத்து கிருஷ்ணன் தனது தவத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
இது பற்றி அவர் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் கூறும்போது, சிவ பெருமானை நேரில் சந்திப்பதற்காக நான் தவம் மேற்கொண்டேன். தற்போது எனக்கு அம்பாள் காட்சி தந்ததால் தவத்தை முடித்துக் கொண்டேன். மேலும் சிவ பெருமானை நினைத்து மீண்டும் வேறொரு இடத்தில் தவம் மேற்கொள்வேன் என்றார்.
முத்துகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர் யாருக்கும் தெரியாமல் சிவபெருமானை நினைத்து சுடுகாட்டு பகுதியில் தவம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating