பணக்கஷ்டம் காரணமாக குழந்தையை விற்ற தாய்..!!
திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராம். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா. இவர்களுடைய சொந்த ஊர் தேனி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில் நித்யா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்துக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த மாதம் 11-ந்தேதி நித்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே வேலை இல்லாமல் பணக்கஷ்டத்தில் இருந்த ஜெயராமிடம், மனைவியின் பிரசவ செலவுக்கு பணம் இல்லை. ஆஸ்பத்திரி சிகிச்சை செலவை கட்ட முடியாததால் அவர், மனைவியிடம் கூறாமல் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே நித்யாவிடம் சிகிச்சை செலவை கட்டுமாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நெருக்கடி கொடுத்தனர். இதனால் செய்வது அறியாமல் தவித்த நித்யா பச்சிளம் ஆண் குழந்தையை விற்க முடிவு செய்தார்.
இதையடுத்து ரூ.85 ஆயிரத்துக்கு அந்த குழந்தையை பம்மலை சேர்ந்த குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் விற்றதாக தெரிகிறது. அதில் ரூ.35 ஆயிரத்தை சிகிச்சை செலவுக்கு எடுத்துக்கொண்டு மீதி தொகையை நித்யாவிடம் கொடுத்துள்ளனர்.
பின்னர் திருவொற்றியூருக்கு திரும்பிய ஜெயராம், குழந்தை குறித்து மனைவியிடம் கேட்டார். அப்போது குழந்தை விற்கப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர், திருவொற்றியூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் ஆஸ்பத்திரி டாக்டர், குழந்தையை வாங்கிய தம்பதியினர், நித்யா ஆகியோரிடம் உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கிய தம்பதியினர் மீண்டும் அந்த குழந்தையை நித்யாவிடமே நேற்று ஒப்படைத்தனர். குழந்தையை வாங்க கொடுத்த பணத்தையும் திரும்ப தரவேண்டாம், குழந்தை பராமரிப்பு செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர். இதையடுத்து அனைவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Average Rating