கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட ஈரோஸ்!!: நடந்தது என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 82) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

Read Time:20 Minute, 28 Second

timthumb (1)குண்டு ஒன்று இலக்குகள் மூன்று: கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டது ஈரோஸ். திட்டம் மிகப் பயங்கரமானது

ஒரே நேரத்தில் பல இலக்குகள்

ஜனாதிபதி மாவத்தையில் உள்ள ஜனாதிபதி மாளிகை, தலைமைத் தபால் நிலையம், பொலிஸ் தலைமைக் காரியாலயம்

மூன்றும்தான் இலக்குகள்.

மூன்று இலக்குகளையும் ஒரே நேரத்தில் தகர்க்கக்கூடியவகையில், மூன்றுக்கும் பொதுவான இடத்தில் குண்டு வெடிக்க வேண்டும்.

வெடிமருந்து நிரப்பப்பட்ட லொறியை கொண்டு சென்று நிறுத்திவிட்டு வந்துவிட்டால் போதும், திட்டம் வெற்றியாகிவிடும்.

மூன்று இலக்குகள் என்பதால் பாரிய குண்டாக இருக்கவேண்டும். அதனால் முதன்முதலாக பெருமளவான வெடிமருந்தை ஈரோஸ் பயன்படுத்தியது.

மொத்தம் 250 கிலோ வெடிமருந்து லொறியில் நிரப்பப்பட்டது.

ரஞ்சன்-குட்டி ஆகியோர் லொறியில் செல்ல வேண்டும். தலைமைத் தபால் நிலையம் முன்பாக உள்ள வாகனத் தரிப்பிடத்தில் லொறியை நிறுத்திவிட்டு இருவரும் வந்துவிடவேண்டும்.

பகல் நேரம் சரியாக 11.05க்கு லொறி குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுவிட வேண்டும்.

சரியாக 11.45 மணிக்கு வெடிக்கக்கூடிய வகையில் குண்டு தயார் செய்யப்பட்டிருந்தது.

குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பில் தேடுதல் நடவடிக்கை தீவிரமாகும்.

கொழும்பில் ஈரோஸ் நடவடிக்கைகளுக்கு துடிப்பாக பங்காற்றியவர் குட்டி. அதனால் குட்டியை பாதுகாக்க வேண்டும். மாட்டிக்கொள்ள விட்டுவிடக் கூடாது என்பதும் ஈரோஸ் தலைமையின் அக்கறையாக இருந்தது.

குண்டுலொறியை கொண்டுசென்று விட்டதும் குட்டி ஒரு ஓட்டோ பிடித்துக் கொண்டு ரயில் நிலையம் சென்று, யாழ்ப்பாணம் போக வேண்டும் என்பதும் கட்டளை.

இடையிலேயே சிக்கல்

11.07.85 அன்று குண்டு லொறியில் இருவரும் ஏறினார்கள். லொறி கொட்டாஞ்சேனை செல்லமஹால் தியேட்டர் அருகேசெல்லும் போது கடிகாரத்தில் நேரம் பார்த்தார் குட்டி.

11.05க்குத்தானே குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லவேண்டும். அதற்கு இன்னமும் போதிய நேரம் இருந்தது. அதனால் செல்லமஹால் தியேட்டருக்கு அருகாமையில் லொறியை ஓரம்கட்டி நிறுத்தச் சொன்னார் குட்டி.

லொறியில் இருந்து இறங்கி தொலைபேசி உள்ள ஒரு இடத்திறகு சென்று, கொழும்பில் இருந்த தமது சகாவுக்கு போன் செய்தார். “எல்லாம் சரி. 11.45க்கு ரயிலில் ஏறிவிடுவேன்” என்று சொல்லிவிட்டு குட்டி திரும்பினார்.

இதற்கிடையே லொறியில் இருந்த ரஞ்சன் ஒரு காரியம் செய்தார்.

குட்டியும் போய்விட்டார். நேரமும் இருக்கிறது. அருகில் உள்ள நண்பரை எட்டிப்பார்த்துவிட்டு வரலாமே என்று நினைத்து லொறியில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டார்.

அப்போது அவ்வழியாக வந்தார் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ்காரர். அந்த இடத்தில் லொறியை நிறுத்தக்கூடாது. எனவே லொறியை நோக்கி அவர் செல்லவும், ரஞ்சன் வந்து லொறியில் ஏறவும் கரியாக இருந்தது.

பொலிஸைக் கண்டதும் ரஞ்சனுக்கு பதட்டம் ஏற்பட்டுவிட்டது. ரஞ்சனுக்கு அனுபவமும் போதாது. இப்படி ஒரு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. குட்டியையும் காணவில்லை. பதட்டம் அதிகரித்தது.

பொலிஸ்காரர் கேட்ட கேளிவிகளுக்கு ரஞ்சனால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை. தடுமாறினார்.

பொலிஸ்காரருக்கு சந்தேகம் தொட்டுவிட்டது. ரஞ்சனுக்கு சிங்களம் தெரியும். ஆனாலும் அவரது பேச்சில் இருந்து தமிழ் ஆள் என்பதும் தெரிந்துவிட்டது.

அதேநேரம் போன் செய்துவிட்டு லொறியை நோக்கி வந்து கொண்டிருந்தார் குட்டி.

லொறிக்கு அருகில் பொலிஸ்காரர் ஒருவர் நிற்பதைக்கண்டுவிட்டார் குட்டி. மெல்ல நழுவினார். வந்த பஸ் ஒன்றில் தொற்றிக்கொண்டு ரயில் நிலையம் சென்றுவிட்டார்.

ரஞ்சனை விசாரித்த பொலிஸ்காரர் கொட்டாஞ்சேனை பொலிசாருக்கு தகவல் அனுப்பினார்.

பொலிஸார் வந்து லொறியை சோதனையிட்டார்கள்.

உள்ளே வெடிகுண்டு.

ரஞ்சன் கைது செய்யப்பட்டார்.

குட்டி யாழ்ப்பாணம் செல்லும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு அதிஷ்டம். லொறி பிடிபட்டிருக்காவிட்டால் கொழும்பில் முதலாவது பாரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கும்.

நேரக்குண்டு ரயிலில்

இலங்கை அரசாங்கத்திற்கு அப்போது உதவி செய்த நாடுகளில் முக்கியமானது பாகிஸ்தான். இராணுவ உதவிகளோடு, இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் வைத்து பயிற்சியும் வழங்கியது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அதிபராக அப்போது இருந்தவர் சியாவுல்ஹக்.

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் சியாவுல்ஹக். அவரது விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை ஒன்றுக்கு திட்டமிட்டது ஈரோஸ்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் ரயில் வண்டியில் நேரக்குண்டு பொருத்தவேண்டும்.

கொழும்பு மருதானை புகையிரத நிலையத்தை நெருங்கும்போது வெடிக்கக்கூடியதாக நேரக்குண்டு தயார் செய்யப்பட்டது. காங்கேசன்துறையில் வைத்து நேரக்குண்டை வைக்கும் பொறுப்பு குட்டியிடமும், கண்ணனிடமும் ஒப்படைக்கப்பட்டது.

பாரிய இழப்பு

மொத்தம் மூன்று குண்டுகள் கொண்டு சென்றனர். மூன்றாவது குண்டை வைக்க முடியவில்லை. மூன்றாவது குண்டுடன் குட்டியும், கண்ணனும் திரும்பிக்கொண்டிருந்தபோது, அந்தக் குண்டு வெடித்துவிட்டது.

குட்டியும், கண்ணனும் பலியானார்கள்.

இரண்டு குண்டுகளுடன் புறப்பட்டது ரயில். மருதானை ரயில் நிலையத்தை சென்றடைய முன்பாக, வியாங்கொடவில் குண்டுகள் வெடித்துவிட்டன.

4 பேர் பலியானார்கள். 10ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குட்டியும், கண்ணனும் பலியானது ஈரோசுக்கு பலத்த இழப்பாக அமைந்தது.

இருவருமே கொழும்பு நடவக்கைகளின் அச்சாணிகளாக இருந்தவர்கள். குட்டியின் சொந்தப் பெயர் விஜய ரஞ்சன். யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்தவர்.

இலண்டனில் இருந்த குட்டி 1982 இல் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்துகொண்டார். இலண்டனில் இருந்து திரும்பிவந்தார். கண்ணனின் சொந்தப்பெயர் பார்த்திபன். கொழும்பு தெமட்டகொடயைச் சேர்ந்தவர்.

கண்ணன் ஜெர்மனியில் இருந்தபோது 1982இல் ஈரோஸின் தொடர்பு ஏற்பட்டது. ஈரோசில் இணைந்து ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்தார்.

இருவரது இழப்பின் பின்னர் கொழும்பில் ஈரோஸ் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.

கொழும்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு கொண்ட ஈரோஸ் உறுப்பினர்களான கரண், ஐ.பி.ரி. வரதன் போன்றோர் பொலிசாரால் தீவிரமாகத் தேடப்பட்டனர்.

எனவே-கொழும்பில் இருந்து குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு பதிலாக வேறு திட்டம் பற்றி யோசித்தது ஈரோஸ்.

யாழிலிருந்து வந்த குண்டு

யாழ்ப்பாணத்தில் சமையல் வாயு விற்பனை செய்வதற்கு பிரபல ஏஜன்டுகளாக இருந்தது முகம்மது அலி, அப்துல் அலி ஏஜன்ட்.

அவர்களிடம் காஸ் சிலின்டர் ஒன்றை வாங்கினார்கள் ஈரோஸ் இயக்கத்தினர்.

காஸ் சிலிண்டரை கவனமாக வெட்டி, உள்ளே வெடிமருந்து நிரப்பப்பட்டதுஃ பின்னர் வெட்டிய தடயமே தெரியாமல் சரிசெய்து சிலிண்டரை திருப்பி ஒப்படைத்து விட்டனர்.

காஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடிக்கக்கூடிய வகையில் கச்சிதமாக தயார் செய்திருந்தனர்.

பலநோக்கு கூட்டுறவு சங்க லொறியில் வெற்று காஸ் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவந்து, காஸ் நிரப்பும் ஆலையில் ஒப்படைக்கப்படும்.

வெற்று சிலிண்டர்களோடு சிலிண்டர்களாக வெடிமருந்து நிரப்பப்பட்ட சிலிண்டரும் வந்து சேர்ந்தது. காஸ் நிரப்பும் வேலை ஆரம்பித்தது. ஈரோஸ் அனுப்பிய சிலிண்டரும் வந்து சேர்ந்தது.

காஸ் நிரப்பப்பட்டுக்கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்தது.

காஸ் நிரப்பும் ஆலைக்கு பலத்த சேதம். மூன்றுக்கு மேற்பட்டோர் பலியானார்கள். இது நடந்தது 18.03.86இல்.

இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதால் ஈரோசுக்கு அதே பாணியில் மற்றொரு நடவடிக்கை மேற்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

அனுராதபுரத்திற்கு வி.ஜெ.சரவணபவனுக்கு சொந்தமான பெற்றோல் பவுசர்களில் யாழ்ப்பாண பெற்றோல் நிலையங்களுக்கு பெற்றோல் வருவதுண்டு.

வி.ஜெ.சரவணபவன் ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர். அதனால் அவரது பவுசர்களுக்கு பெற்றோல் நிரப்பும் ஆலைகளில் தனி மரியாதை.

யாழ்ப்பாணத்தில் நின்ற அவரது பெற்றோல் பவுசர் ஒன்றை தமது பாவணைக்கு தருமாறு வாங்கினார்கள் ஈரோஸ் இயக்கத்தினர்.

பெற்றோல் பவுசருக்குள் வெடிமருந்தை நிரப்பிவிட்டு, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர்.

தமது பாவணைக்குத்தான் பவுசரை ஈரோஸ் இயக்கத்தினர் கொண்டுசென்றனர். பாவணை முடிந்ததும் பத்திரமாகத் திருப்பித் தந்துவிட்டனர் என்று வி.ஜெ.எஸ். நிறுவனத்தினருக்கு நல்ல சந்தோசம்.

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட பெற்றோல் பவுசர் அனுராதபுரம் பெற்றோல் நிரப்பும் ஆலைக்குச் சென்றது.

23.04.86 அநுராதபுரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குள் வி.ஜெ.எஸ். பெற்றோல் பவுசர் அனுமதிக்கப்பட்டது. பெற்றோல் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது பவுசர் வெடித்தது.

எங்கும் தீ பற்றிக்கொண்டது. உடனடியாகத் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பெற்றோலியக் களஞ்சியம் எரிந்து கொண்டிருந்தது.

குண்டுவெடிப்பில் 9 பேர் வரை கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

பலகோடி ரூபாய்கள் அரசுக்கு நஷ்டம். பெற்றோலியக் களஞ்சியம் முற்றாக நாசமடைந்தது.

இலங்கையில் மிகப்பெரிய பெற்றோலியக் களஞ்சியம் ஒன்றுக்குள் நடத்தப்பட்ட முதலாவது பெரிய தாக்குதல் அதுதான்.

கொழும்பில் மீண்டும்

கொழும்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஹென்றி என்னும் தமது உறுப்பினரை அனுப்பிவைத்தது ஈரோஸ். அவருக்குக் கொடுக்கப்பட்ட முதலாவது இலக்கு கொழும்பு தந்திக்காரியாலயம்.

குண்டுப்பார்சலை கொண்டுசென்று உள்ளே வைத்துவிட்டு வந்துவிடவேண்டியதுதான். 07.05.86 அன்று காலையிலேயே பார்சலுடன் புறப்பட்டுவிட்டார் ஹென்றி.

ஹென்றிக்கு அதுதான் முதல் அனுபவம். பார்சலோடு சென்ற தன்மீது சந்தேகப்பார்வைகள் விழுவது மாதிரி ஒரு உறுத்தல். சாதாரணமான பார்வைகளும் சந்தேகப்பார்வைகள் போலத்தான் தெரிந்தன.

எனவே-குண்டுப்பார்சலை குறிப்பிட்ட இடத்தில் வைக்காமல், வேறு ஒரு இடத்தில் வைத்துவிட்டு திரும்பிவிட்டார்.

காலை 9.22 மணிக்கு குண்டுவெடித்தது.

தந்திக்காரியாலயத்தில் நின்றவர்கள் 12 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர். தந்திக்காரியாலய மேல்மாடி இடிந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு தந்திச்சேவைகள் பாதிப்படைந்தன.

குறிப்பிட்ட இடத்தில் குண்டுவைக்கப்பட்டு இருந்தால் சேதம் பல மடங்காகி இருக்கும்.

மற்றொரு லொறிக்குண்டு: மூன்றுநாள் எரிந்தது பெற்றோல் களஞ்சியம்

கொலன்னாவையில் உள்ள பெற்றோல் குதம்மீது குண்டுத்தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டது ஈரோஸ். திட்டத்;தை நிறைவேற்றும் பொறுப்பு ஹென்றியிடம்தான் ஒப்படைக்கப்பட்டது.

லொறியில் வெடிமருந்தை நிரப்பிக் கொண்டுசென்று தாக்குவதுதான் திட்டம். வெள்ளவத்தை இராகிருஷ்ண மிஷனுக்கு பின்புறம் உள்ள இடத்தில் லொறியை நிறுத்தி வைத்திருந்தனர்.

வெடிமருந்து நிரப்புவதற்காக ஹென்றி லொறியை தயார் செய்து கொண்டிருந்தார்.

வெள்ளவத்தை ரயில்வே பாதையில் காவலுக்கு நின்ற பொலிசாருக்கு ஹென்றியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டன.

என்ன செய்கிறார் என்று பார்க்க பொலிசார் லொறி அருகே வந்தனர். ஹென்றி பதட்டமில்லாமல் பொலிசாரோடு பேசி, அவர்களை சமாளித்து அனுப்பியிருக்கலாம்.

ஆனால், ஹென்றி பொலிசாரைக் கண்டதும் ஓடத்தொடங்கி விட்டார். பொலிசார் துரத்தத் தொடங்கினார்கள். ஹென்றி பிடிபட்டார்.
லொறியில் இருந்த குண்டும் மாட்டியது.

கொலன்னாவ எரிபொருள் குதம் அதனால் தப்பியது.

டயருக்குள் தந்திரம்

கொழும்புக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து வெடிமருந்தை கொண்டுவந்து சேர்ப்பதற்கு பல தந்திரங்களைக் கையாண்டது ஈரோஸ்.

சுதா மாஸ்டரும் வேறு சில ஈரோஸ் உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வெடிமருந்துகளை அனுப்பிவைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

லொறியில் மேலதிகமாக வைக்கப்பட்டிருக்கும் டயரில் (எக்ஸ்ராவீல்) வெடி மருந்தை நிரப்பியும் பலமுறை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ரியூப்புக்குள் வெடிமருந்தை அடைத்து, மீண்டும் ரியூப்பை ஒட்டுவார்கள். காற்றில்லாமல் இருந்தால் சந்தேகம் வருமல்லவா. அதனால் குறிப்பிட்டளவான காற்றும் அடித்துவிடுவார்கள்.

15 கிலோ காற்றுத்தான் அடிக்க வேண்டும். சற்று காற்றுக் கூடினாலும் ஆபத்து. வெடித்துவிடும். பொலிசார் தீவிரமாக லொறிகளை சோதனையிட்டுத்தான் கொழும்புக்குள் அனுமதிப்பர்.

கொழும்பில் தொடராக பல குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றதால், லொறிகளில் வெடிமருந்துகள் கொண்டுவரப்படலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு ஏற்பட்டிருந்தது. எனவே-பலத்த சோதனை நடக்கும்.

ஆனால், காற்றுள்ள டயருக்குள் வெடிமருந்து இருக்கும் என்று சந்தேகம் வரவேயில்லை.

ஜனாதிபதி மாளிகை தாக்குதலுக்கு திட்டமிட்டபோது இரண்டு லொறிகளில் எக்ஸ்ரா வீலுக்குள் வெடிமருந்தை கொழும்புக்கு அனுப்பியிருந்தது ஈரோஸ்.

ஈரோஸில் அப்போது இராணுவத் தளபதியாக இருந்தவர் சங்கர் ராஜி. துணைத் தளபதி கரண்.

கொழும்பில் ஹென்றி மாட்டியதால், யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு கொழும்பில் மேற்கொள்ளக்கூடிய மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிட்டது ஈரோஸ்.

(தொடர்ந்து வரும்)

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரம் வளர்த்தல்…!!
Next post விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட 13 பேர் வைத்தியசாலையில்..!!