இரசாயன ஊசி விவகாரம்: வடக்கு ஆளுனரின் பதில் இதுதான்..!!
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டு உயிரிழந்ததாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடமாகாண சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது தான், எனக்குத் தெரியவந்தது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 107 பேர் உயிரிழந்தமை தொடர்பாக வடமாகாண ஆளுநர் என்ற வகையில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டார்.
அத்துடன், இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் எமக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இது பற்றி தகவல்களைத் தரும் பட்சத்தில் ஜனாதிபதி மட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இதன்போது, முல்லைத்தீவு கொக்கிளாய்ப் பிரதேசத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்படும் விகாரை தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் தகவல் கேட்டதன் பின்னர், வடமாகாண சபை உறுப்பினருடன் குறித்த பிரதேசத்திற்குச் செல்லாது நீங்கள் மாத்திரம் இரகசியமாகச் சென்று பார்வையிட்டுள்ளதாகத் தகவலொன்று வெளியாகியுள்ளதே? என ஊடகவியலாளரொருவர் ஆளுநரிடம் வினவினார்.
அதற்கு பதிலளித்த அவர், என்னால் தனியாக எங்கும் சென்று பார்க்க முடியும். அவ்வாறு போக முடியாது என சொல்ல யாருக்கும் உரிமையில்லை. கள்ளுத் தவறணைக்கு செல்வதற்கும் கூட எனக்கு உரிமை இருக்கிறது. இது குறித்து யாரும் என்னைக் கேட்க முடியாது. மாகாணசபை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ள நிலையில் என்னைச் சந்திக்கவும், தமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எனக்குத் தெரியப்படுத்தவும் அவர்களுக்கு உரிமையுள்ளது என்றார்.
இதேவேளை, சிங்கள, முஸ்லிம் மக்களை அவர்களுடைய பாரம்பரிய கிராமங்களில் மீள்குடியேற்ற உருவாக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பிய போது,
இந்தக் கேள்விக்கான பதில் என்னிடமில்லை. அரசாங்கத்திடம் தான் இதற்கான கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். மேலும் நான் அறிந்த வரையில் வடமாகாண சபையை இந்தச் செயலணியில் இடம்பெறுமாறு ஜனாதிபதி அழைத்த போதும் போனதா? இல்லையா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முன்னர் இந்தச் செயலணியிலிருந்த போதும் அதன் பின்னர் அந்தச் செயலணியில் நான் பங்கெடுக்கவில்லை எனவும் பதிலளித்தார்
Average Rating