3 அடி அம்மன் சிலையைக் கடத்திய மூவர் கைது, மற்றொருவர் குறித்து விசாரணை..!!
பொகவந்தலாவ – லோய்னோன் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காணாமல் போன அம்மன் சிலை, நேற்று இரவு 09.00 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன், மற்றும் ஒருவரைக், கைதுசெய்யும் நோக்கில் பொகவந்தலாவ பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி லோய்னோன் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த, 03 அடி உயரம் கொண்ட, ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை காணாமல் போனதாக, கோயில் நிர்வாகம் கடந்த 01ம் திகதி ஜூலை மாதம் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொகவந்தலாவ பொலிஸார் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பலாங்கொட பின்னவல – தெதனகல கிழ் பிரிவு தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த அம்மன் சிலை மீட்டனர்.
மேலும், அம்மன் சிலையினை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
அத்துடன், இந்த அம்மன் சிலை, கடந்த ஜந்து நாட்கள் ஜேப்பல்டன் காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பிறகு பின்னவல – தெதனகல தோட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொட – பின்னவல – தெதனகல கிழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இருவரும் பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பூசகர் ஒருவருமாவர்.
இவர்களை, இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating