மூதூரில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறினார்கள்
இலங்கையின் கிழக்கு நகரமான மூதூரில் இருந்து தாங்கள் வெளியேறியுள்ளதாக விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், இலங்கை அரச படைகளுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையில் இந்த பகுதியிலேயே மிக தீவிரமான மோதல் இடம்பெற்றது.
சண்டையினால் வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்காக தாங்கள் வெளியேறுவதாக விடுதலை புலிகள் கூறியுள்ளனர். மூதூர் நகரம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இராணுவம் கூறியுள்ளது.
விடுதலைப்புலிகள் மூதூரில் இருந்து தாமாகவே வெளியேறவில்லை என்றும் தாம் அவர்களை தாக்கி துரத்தியதாகவும் இலங்கை அரசாங்க தரப்பில் பேசவல்ல ஒரு அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை மூதூர் பிரதேச மக்கள் தமது பழைய இருப்பிடங்களுக்குத் திரும்ப வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.