லெபனான் மீது விடிய விடிய தாக்குதல்: 15 கிராமங்கள் தரைமட்டம்
இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 25 நாட்களுக்கு மேலாக நடக்கும் இந்த தாக்குதலில் லெபனானின் பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது. முக்கிய சாலைகள், பாலங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மின்சார நிலையங்கள் சேதம் அடைந்துவிட்டன. உணவு மற்றும் அவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் சேதம் அடைந்துவிட்டன.
900-க்கும் மேற்பட்ட பொது மக்கள் இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்டுவிட்டனர். காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்வர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் இல்லை. நூற்றுக்கணக்கான நகரங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
நேற்று ஒரே நாளில் லெபனானின் எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் விமானங்கள் 250 தடவை வட்டமடித்து பறந்து குண்டுகளை வீசின. 7 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் 4000 குண்டுகள் வீசப்பட்டன. அயதரன் என்ற கிராமத்தில் மட்டும் 2000 குண்டுகள் விழுந்தன.
ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் முகாம்கள் மீது குறிவைத்து விடிய விடிய நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 15 கிராமங்கள் தரைமட்டமாகிவிட்டன.
ஹிஸ்புல்லா இயக்கத்தினர் முகாம் அமைத்துள்ள சிடான் உள்பட பல கிராமங்களில் தொடர்ந்து குண்டு வீசப்போவ தாகவும், பொதுமக்கள் தப்பி ஓடிவிடும்படியும் விமானங்களின் மூலம் துண்டு பிரசுரங்களை இஸ்ரேல் ராணுவம் வீசி வருகிறது.