‘கள்ளக் காதல் செய்யும் மனைவியைக் கொல்வது கொலைக் குற்றமல்ல’
கள்ளத்தொடர்பை விடுமாறு கூறியும் கேட்காத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்வது, கொலைக் குற்றச் செயல் ஆகாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரின் தண்டனையை 7 ஆண்டாக மாற்றியும் உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்தது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி வேறு ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இதை பலமுறை பாபு கண்டித்தும் அதை அவரது மனைவி கேட்கவில்லை. உள்ளூர் பெரியவர்களிடம் புகார் செயதும், அவர்கள் கண்டிததும் கூட பாபுவின் மனைவி கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாபு தனது மனைவியை கொலை செய்தார்.
அவர் மீது திண்டுக்கல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இ.பி.கோ. 302 (திட்டமிட்டுக் கொலை செய்தல்) பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து பாபு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார். நீதிபதி சொக்கலிங்கம், செல்வம் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். பலமுறை தனது மனைவியை எச்சரித்தும் அவர் கேட்காததால் தான் கோபம் மற்றும் ஆத்திரத்தால் தான் பாபு கொலை செயதுள்ளார். எனவே இதை திட்டமிட்ட கொலையாக கருத முடியாது. வேண்டும் என்றே அவர் செய்ய வில்லை.
எனவே இதை 302வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை. 304(1) (உந்துதலால் கொலை செய்வது) பிரிவின் கீழ் தான் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்க வேண்டும். எனவே பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.