கல்விக் கட்டணம் செலுத்தாததால் ஆறாம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற அதிகாரிகள்…!!
மணிப்பூரின் லான்கோல் பகுதியில் உள்ள பள்ளியில் தங்கி படித்து வந்த 6-ம் வகுப்பு மாணவன் சுரேஷ் தாங்பிராம், கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை கட்டாததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். ஆனால், அங்கு சென்ற மாணவன், மறுநாள் மர்மமான முறையில் இறந்துவிட்டான். பள்ளி அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதால் மாணவன் இறந்துவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் போலீசார் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவன் இயற்கைக்கு மாறாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி மாணவன் சுரேஷின் தந்தை கூறுகையில், “என்னுடைய மகனை இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இம்பால் அருகே உள்ள லாங்கோலில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு பள்ளியில் சேர்த்தேன். என்னுடைய வறுமை காரணமாக பள்ளி மற்றும் விடுதியின் கட்டணத்தை என்னால் செலுத்த முடியவில்லை.
பள்ளி அதிகாரிகள் கட்டணத்தை செலுத்துங்கள் அல்லது உங்களது மகனை அழைத்து செல்லுங்கள் என்று வலியுறுத்தினார்கள். நான் என்னுடைய மகனை அழைக்க சென்றபோது கட்டணத்தை செலுத்தாவிட்டால் உங்களுடைய மகனை அனுப்ப மாட்டோம் என்று கூறினர். பின்னர் பள்ளி அதிகாரிகள் என் மகனை வெள்ளிக்கிழமை இரவு அழைத்து வந்தார்கள். அவன் உடல் முழுவதும் காயம் காணப்பட்டது. கீழ்ப்படியாத காரணத்தினால் உங்களுடைய மகனை அடித்தோம் என்று கூறினார்கள். மேலும், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று கோபத்துடன் மிரட்டிவிட்டு சென்றனர்.
எனக்கு நீதி கிடைக்கும் வரையில் சடலத்தை திரும்ப பெற மாட்டேன். பள்ளி அதிகாரிகள் கொடுமை செய்ததில்தான் என்னுடைய மகன் இறந்துவிட்டான்’ என்று குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating