மதனப்பள்ளியில் கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை பிச்சைக்காரர்களிடம் கொடுத்த பெற்றோர்: அதிகாரிகள் மீட்டனர்…!!
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி லட்சுமிநகரை சேர்ந்தவர் கங்கராஜு. இவருடைய மனைவி ஜோதி. இருவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஜோதி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதிக்கு கடந்த 26-ந்தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு இரு கால்கள் இல்லை. கைகளும் வளர்ச்சியில்லாமல் குட்டையாக இருந்தன. குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை செய்த டாக்டர்கள், இருதய கோளாறு இருப்பதாக கண்டறிந்தனர். கணவன், மனைவி இருவரும் தினக்கூலியாக கட்டிட வேலை செய்து வருவதால், குழந்தையை வளர்க்க முடியாமலும், கால்கள் இல்லாமல் பிறந்து விட்டதே என்ற மனவேதனையிலும் இருந்து வந்தனர்.
அந்தக் குழந்தையை, பெற்றோர் மதனப்பள்ளிக்குத் தூக்கி சென்றனர். மதனப்பள்ளி என்.டி.ஆர். சர்க்கிளில் பிச்சை எடுக்கும் ஒரு தம்பதியரிடம் கொடுத்தனர். அத்துடன், அந்தத் தம்பதியருக்கு செலவுக்காக ரூ.300 பணமும் கொடுத்துள்ளனர்.
பிச்சை எடுக்கும் தம்பதியரிடம் கால்கள் இல்லாமல் ஆண் குழந்தை இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர். அதற்கு அவர்கள், பெயர் விவரம் தெரியாத ஒரு தம்பதியர் குழந்தையை தூக்கி வந்து தங்களிடம் கொடுத்ததாக கூறினர். குழந்தையை நாங்கள் திருடி வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதுபற்றி குழந்தைகள் நல காப்பகத்துக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், குழந்தைகள் நல அதிகாரிகள் சரளாதேவி, ராதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிச்சை எடுக்கும் தம்பதியரிடம் இருந்த கால்கள் இல்லா குழந்தையை மீட்டு விசாரித்தனர். அவர்கள், குழந்தையை தந்த பெற்றோரின் விவரத்தை அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து அதிகாரிகள், அந்தக் குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோரான கங்கராஜு, ஜோதியை அதிகாரிகள் வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். இந்தக் குழந்தையை யாரிடமும் கொடுத்தாலோ அல்லது விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating