வீட்டு வேலை செய்யக்கூறி சிறுமிக்கு கையில் சூடு வைத்து கொடுமை: ஆசிரியை- மகளிடம் போலீசார் விசாரணை…!!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் படுகை புதுத்தெரு அம்மன் நகரில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மனைவி ராகிணி (வயது50). இவர் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரண்யா(30). இவரும் தாயுடன் வசித்து வருகிறார்.
இவர்களது வீட்டில் குளித்தலை தாலுகா கவுண்டம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கோபிகா(12) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சுப்பிரமணியன் இறந்து விட்டதால் ஆதரவின்றி தவித்த அவளை சரண்யா தன் தாய் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
கடந்த 1½ வருடமாக ராகிணி வீட்டிலேயே தங்கி அவர் வேலை செய்யும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் அவர்களது வீட்டு வேலைகளையும் அந்த சிறுமி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கீழே கிடந்த சீப்பை எடுக்குமாறு ராகிணியும், சரண்யாவும் கூறியுள்ளனர். ஆனால் சிறுமி கோபிகா அதனை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தாய்-மகள் இருவரும் சேர்ந்து சிறுமியின் இடது கையில் 3 இடங்களில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அக்கம்பக்கத்தில் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் தஞ்சை அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரஸ்வதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பாபநாசம் போலீசில் இதுபற்றி நேற்று புகார் கொடுத்தார்.
இதன்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து ஆசிரியை வீட்டிற்கு சென்று 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார். அங்கிருந்த சிறுமி கோபிகாவை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
சிறுமியை ஆசிரியை மற்றும் அவரது மகள் வீட்டு வேலை செய்ய சொல்லி சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating