இறந்துபோன 2 வயது மகளுடன் விடிய விடிய கண்ணீர் வடித்த தாய்: தொடரும் அவலம்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் தாய் ஒருவர் தனது இரண்டு வயது மகளுடன் விடிய விடிய கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்திரபிரதேசம் பக்பத் மாவட்டத்தை சேர்ந்த இம்ரானா என்பவர், உடல்நிலை சரியில்லாத தனது மகளை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அங்கு சென்றபின்னர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் இம்ரானா தனது மகளின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி வேண்டுமென்று கேட்டுள்ளார்.
இதற்கு மருத்துவமனை அதிகாரிகள் வெளிமாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி கொடுக்க முடியாது. நீங்கள் தனியார் ஆம்புலன்ஸை அழைத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இம்ரானா தனியார் ஆம்புலன்ஸை கேட்டுள்ளார். ஆனால் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ 1,500 ரூபாய் கொடுத்தால் வருகிறேன் என்று கூறியதால் கையில் பணம் இல்லாத இம்ரானா செய்வதறியாது திகைத்து மருத்துவமனை வாசலிலே தன் மகளை கட்டிக் கொண்டு விடிய விடிய கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில், மறுநாள் காலையில் சமூக சேவகர்கள் சிலர் நிலைமையை அறிந்து அவருக்கு பண உதவி அளித்ததன் பின்பு மகளின் உடலை இம்ரானா வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில் ஸ்டெச்சர் வசதி கூட இல்லாமல், மகனை தோளில் தூக்கிக் கொண்டு தந்தை ஒருவர் வேறு வார்டுக்கு ஓடிய காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating