சீனாவில், உளவாளியின் மரணதண்டனை வீடியோ படம்
தைவான் நாட்டுக்காக உளவு வேலை செய்ததாக கைதான சீன அரசு ஊழியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது வீடியோ படமாக எடுக்கப்பட்டு அது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போட்டுக்காட்டப்பட்டது. 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு சீனா-தைவான் இடையே பிளவு ஏற்பட்டது. அது முதல் ஒன்றையொன்று உளவு பார்ப்பது வாடிக்கை ஆகிவிட்டது.
இதற்காக சீனாவில் வசிக்கும் சீனர்களையே பணம் கொடுத்து வாங்கி அவர்கள் மூலம் உளவு வேலையை தைவான் செய்து வருகிறது. அதுபோலத்தான் சீனாவும் தைவான் நாட்டினரை விலைகொடுத்து வாங்கி ஒற்றர்களாக வைத்து இருக்கிறது.
சீனாவில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிஷன் இலாகாவில் உயர்பதவியில் இருந்தவர் டோங்டேனிங். கிட்டத்தட்ட 50 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் தூக்கிலிடப்பட்டார். சமீபகாலத்தில் தூக்கிலிடப்பட்ட அதிகாரிகளில் மிக உயர்ந்த பதவி வகித்தவர் ஆவார்.
ஒரு கோடிக்கு மேல்
கடந்த 15 ஆண்டுகளில் இவர் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ரகசிய ஆவணங்களை விற்று இருப்பது தெரியவந்தது. இதனால்தான் இவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். இப்படி தண்டிக்கப்பட்ட காட்சி வீடியோ படமாக பதிவு செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு அந்த வீடியோ படம்போட்டு காட்டப்பட்டது. அரை மணிநேரம் ஓடும் இந்தப்படம் அரசு ஊழியர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதற்காக போட்டுக் காட்டப்பட்டது.
இந்த வீடியோ படத்தில் டோங் போலீஸ்காரில் ஏறுவது,தூக்குமேடைக்கு அவர் கொண்டுசெல்லப்படுவது போன்றவை காட்டப்பட்டன. தூக்குப் போடப்படுவது அதில் இடம்பெறவில்லை.
அதிகரித்து வரும் பழக்கம்
பொருளாதார சீர்திருத்தம் நடைமுறைப்பட்டது முதல் பணத்துக்காக அரசுத் தகவல்களை விற்பது அதிகரித்துவிட்டது. இந்த ஆண்டு அரசுத் திட்டக்குழுவில் உயர் பொறுப்பில் இருந்த சென் ஹூய் என்ற அதிகாரி அரசு ரகசியங்களை ஜப்பானுக்கு விற்றதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மேஜர் ஜெனரல் லீï குவான்ஷி தைவானின் உளவாளியாக செயல்படுவதற்காக இருந்த நிலையில் சாதாரண வீரர்களிடம் பதவி உயர்வுக்காக பணம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். அவருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.