ராஜாக்கமங்கலம் அருகே கடல் அலையில் சிக்கி 4 குழந்தைகளின் தாய் பலி…!!
நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, மேல தர்மபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். ஒர்க்ஷாப் உரிமையாளர்.
இவரது மனைவி ராதா (வயது 40). இவர்களுக்கு அபினயா, அகல்யா, தர்ஷினி என்ற மகள்களும், அருண் என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (4-ந் தேதி) உறவினர்களுடன் அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். அங்கு ஒவ்வொரு இடங்களையும் பார்த்து விட்டு இறுதியாக ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தென்பால் கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு கண்ணன் மற்றும் அவரது மனைவி ராதா, மகள்கள் அபினயா, அகல்யா, தர்ஷினி மற்றும் மகன் அருண் ஆகியோர் அனைவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தப்படி கடலின் அருகில் சென்று அலையை ரசித்தப்படி அதில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.
அப்போது திடீரென ஒரு ராட்சத அலை எழுந்தது. அது கண்ணன் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றது.
அலையில் சிக்கி தவித்த கண்ணன் குடும்பத்தினர் அலறினர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மேலும் அங்கு நின்ற மீனவர்களும் விரைந்து வந்து அலை இழுத்து சென்றவர்களை மீட்டனர். இதில் கண்ணன் மற்றும் அவரது குழந்தைகள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராதா மட்டும் அலையில் மூழ்கி கடல் நீரை குடித்து உயிருக்கு போராடினார். அவரை உடனடியாக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை ராதா பரிதாபமாக இறந்து போனார்.
இது பற்றி கண்ணன் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி, இறந்துபோன ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து கடலோர குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating