ஹமாஸ் தலைவர்கள் தொடர்ந்து கைது
பாலஸ்தீனப் பகுதிகளில் வசிக்கும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கைது செய்து வருகிறது. ஹமாஸ் இயக்கம் தங்களுக்குள் சட்டமன்றம் போல ஒரு அமைப்பை நடத்தி வருகிறது. அதன் “”சபாநாயகர்” அஜீஸ் துவைக் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார். ஃபதேல் ஹம்தான் என்ற “”சட்டமன்ற உறுப்பினர்” திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார். இதற்காக ரமல்லா நகருக்கு 24-க்கும் மேற்பட்ட ராணுவ ஜீப்புகளில் இஸ்ரேலியர்கள் வந்தனர். அவர்கள் ஹமாஸ் இயக்கத்தவர் வசிக்கும் இடங்களைச் சுற்றி வளைத்தனர்.
ஹமாஸ் என்ற அமைப்பை பாலஸ்தீனர்களின் விடுதலைக்கான அமைப்பாக, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நாடுகள் கருதுகின்றன. ஆனால் இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் அதை பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றன.
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இருவர் உயிரோடு கடத்தப்பட்டதில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் பங்கு இருப்பதால் இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் கண்டுபிடித்து நிர்மூலமாக்கும் பணியில் இஸ்ரேல் இறங்கியிருக்கிறது.
கடந்த மாதம் 29-ம் தேதி முதல் ஹமாஸ் இயக்கப் பிரமுகர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து வருகிறது. இதுவரை 8 அமைச்சர்கள், 26 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 64 அரசியல் தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் இப்படிக் கைது செய்திருக்கிறது.