திருவண்ணாமலை அருகே ஸ்குரூடிரைவரால் குத்தி விவசாயி படுகொலை…!!
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் வி.பி.குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன்கள் குமார் (வயது 43), செல்வம். குமார் விவசாயம் செய்து வந்தார். செல்வம் கடந்த 2 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். செல்வத்தின் மனைவி அஞ்சுலா, குமார், ஏழுமலை ஆகிய 3 பேரும் தனித்தனி குடும்பமாக அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது வேடந்தாவடி, கூத்தாண்டவர்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பவர் அஞ்சுலாவின் வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் கதவை அவர் தட்டினார். அஞ்சுலா கதவை திறக்கவில்லை. ஆனால் கார்த்திகேயன் தொடர்ந்து கதவை தட்டி தொல்லை கொடுத்தார். இதனால் அஞ்சுலா சத்தமிட்டார்.
மருமகளின் வீட்டு கதவு தட்டப்படுவதையும், மருமகள் சத்தம் கேட்பதையும் அறிந்த ஏழுமலை டார்ச் லைட்டை அடித்தபடி அங்கு சென்றார். இதை பார்த்த கார்த்திகேயன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஏழுமலை கூச்சலிட்டபடி அவரை பிடிக்க நினைத்தார். ஆனால் முடியவில்லை. இருந்தபோதிலும் அங்கிருந்து ஓடுவது கார்த்திகேயன் என்பதை ஏழுமலை பார்த்துவிட்டார்.
இந்த நேரத்தில் தந்தையின் சத்தம் கேட்டு குமார் அங்கு வந்தார். அவரிடம் நடந்ததை ஏழுமலை கூறினார். இதைத் தொடர்ந்து கார்த்திகேயனை கண்டிப்பதற்காக ஏழுமலையும், குமாரும் கூத்தாண்டவர் புரத்துக்கு சென்றனர்.
அங்கு கார்த்திகேயனை பார்த்து எச்சரித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பானது.
ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் வீட்டுக்குள் சென்று ஸ்குரூடிரைவரை எடுத்து வந்து குமாரின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் குமார் கீழே சரிந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இரவில் குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating