அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்கள்-ராணுவத்தினர் பலி: விளக்கம் கேட்கிறது சோமாலியா…!!
அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியானதாகவும், இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சோமாலியா அரசு வலியுறுத்தி உள்ளது.
சோமாலியாவில் அல்-ஷபாப் தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. அவர்கள் முகாம் மீது தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.
இந்த நிலையில் பின்ட்லேண்ட் அருகேயுள்ள கால்முடக் பிராந்தியத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு அங்கு அமெரிக்க போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின.
அதில் 22 பேர் பலியாகினர். அவர்களில் 9 பேர் அல்ஷபாப் தீவிரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இதை அல்-ஷாப் தீவிரவாதிகள் மறுத்துள்ளனர்.
அமெரிக்கா குண்டு வீசிய பகுதியில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் யாரும் இல்லை என சோமாலியா ராணுவமும் தெரிவித்தது. அமெரிக்கா தவறுதலாக குண்டு வீசியதில் பலியான அனைவருமே பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து சோமாலியா அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது கால்முடக் பகுதியில் விமான தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்கா விரிவான விளக்கம் அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து கால்முடக் பகுதியில் கால்காயோ நகரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அமெரிக்க தேசியக் கொடியை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Average Rating