யாழில் தொடரும் வாள்வெட்டு! நேற்றிரவு இரு சகோதரர்கள் உட்பட மூவர் படுகாயம்…!!
இனந்தெரியாத ஒன்பது பேர் கொண்ட குழுவினர் வாளால் சரமாரியாக வெட்டியதில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி அத்தியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தினைச் சேர்ந்த ஜெனுசன் அஜந்தன் (வயது 16) யாழ்ப் பாணம் ஸ்ரான்லி வீதியினை சேர்ந்தவர்களான யோகேஸ்வரன் புவித்தன் (வயது 21) மற்றும் அவரது சகோதரனான யோகேஸ்வரன் கோபிகன் (வயது 18) ஆகிய மூன்று இளைஞர்களுமே வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு 9.00 மணியளவில் பிரஸ்தாப மூன்று இளைஞர்களும் யாழ்ப் பாணம் அத்தியடிப் பகுதியில் உள்ள பலசரக்குக்கடையில் நின்று உரையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் அடங்கிய இனந்தெரியாத குழு அங்கு நின்ற மூன்று இளைஞர்கள் மீதும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளது.
இதில் பிரஸ்தாப இளைஞர்களுக்கு கால் பகுதி, முதுகு மற்றும் தலைப்பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
வாளால் வெட்டியவர்கள் முகத்தினை துணியினால் மறைத்தபடி தலைக்கவசம் அணிந்திருந்ததோடு மூன்று மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளும் மறைக்கப்பட்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating