திருமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்: 5 பேர் காயம்…!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மகன் சூரிய சதீஷ் (வயது23). ராணுவவீரர். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் பாலமுருகன் (24), மாரியப்பன் (28) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சாலை முத்தையா கோவில் பகுதியில் அவர்கள் சென்றபோது சாத்தங்குடியில் உள்ள மற்றொரு தரப்பை சேர்ந்த அருண்மொழி (25), பிரபாகர் (23) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் முன்விரோதத்தில் சூரிய சதீஷ் உள்ளிட்ட 3 பேரை தாக்கி உள்ளனர்.
இது குறித்த தகவல் ஊருக்கு கிடைக்க சூரிய சதீஷ் தரப்பினர் திரண்டு வந்தனர். அவர்கள் திருமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே அருண் மொழி மற்றும் பிரபாகரை வழிமறித்து தாக்கினர்.
இந்த தாக்குதல் சம்பவங்களில் சூரிய சதீஷ், பாலமுருகன், மாரியப்பன், அருண்மொழி, பிரபாகர் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாரியப்பன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மோதல் குறித்து திருமங்கலம் நகர் போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். பாலமுருகன் புகாரின்பேரில் அருண்மொழி, பிரபாகர் மீதும், அருண்மொழி புகாரின் பேரில் பரமன், பிரபு, அழகுமலை கண்ணன், சுரேஷ், சூரியசதீஷ், பால முருகன் மற்றும் பலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பிரபு என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் மோதல் தொடர்பாக வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் தடுக்கும் வகையில் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சாத்தங்குடி கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating