காஞ்சீபுரத்தில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை…!!
காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை, இந்திரா நகர் கனக தூர்க்கை அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவநேசன். இவர் ஓய்வுபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்.
இவரது மனைவி கலைவாணி. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகள் குரோம்பேட்டையில் டாக்டராக உள்ளார். அவரை பார்ப்பதற்காக சிவநேசன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்றார்.
நேற்று மாலை அவர் திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. லாக்கரும் திறந்து கிடந்தது. அதிலிருந்த 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்களை காணவில்லை. மர்ம கும்பல் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
சிவநேசன் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். லாக்கர் அங்கேயே அதன் சாவியும் இருந்துள்ளது. எனவே கொள்ளை கும்பல் எளிதாக நகையை சுருட்டி சென்றுவிட்டனர்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி பேராசிரியை வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating