கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் மாணவர் வெட்டி சாய்ப்பு: போலீசார் விசாரணை..!!
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பயணிகள் பெரும் அளவில் கூடுகின்ற ரெயில் நிலையங்களில் சர்வ சாதாரணமாக வெட்டிக் கொல்லும் சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பையும், பீதியையும் உண்டாக்கியது.
அதைத் தொடர்ந்து ஓடும் ரெயிலில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்தது. சேலத்தில் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து அதிகாரியை தாக்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தது ஆகிய சம்பவங்கள் ரெயில் நிலையங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தவாங்மைக்கேல் முரளி (வயது23) என்பவர் இன்று காலையில் கோட்டூர்புரம் பறக்கும் ரெயில் நிலையத்தில் தனது காதலியுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு கும்பல் கையில் அரிவாளுடன் அங்கு சென்றது. அவர்களை பார்த்ததும் காதலர்கள் மிரண்டனர்.
அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் மாணவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. பலத்த வெட்டுப்பட்ட அந்த மாணவர் உயிருக்கு போராடினார்.
உடனே அவரை மீட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றி எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பட்டப்பகலில் ரெயில் நிலையத்திற்குள் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating