ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கமாண்டோ படை, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தனர். ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், உரி தாக்குதல் போன்று வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் லாங்கேட்டில உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. நீண்டநேரம் நீடித்த இந்த சண்டையில், 3 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடக்கு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறை. கடந்த 2-ம் தேதி பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
ராணுவ முகாமை தீவிரவாதிகள் தாக்கியதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன.
Average Rating