“72 மணிநேரத்துக்கு அமைதி” ரஷியாவின் திட்டத்தை ஏற்கமாட்டோம் – இஸ்ரேல் எதிர்ப்பு
லெபனான் விவகாரத்தில் போர்நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு வல்லரசு நாடுகள் இடையே உடன்பாடு எட்டப்படுவதற்கு தாமதமாவதால் 72 மணிநேர போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை ரஷியா கொண்டு வந்து உள்ளது. இந்த திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று இஸ்ரேல் எதிர்த்து உள்ளது.
ஆயிரம் பேர் பலி
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு தரைப்படையும் லெபனான் நாட்டுக்குள் புகுந்து பீரங்கித்தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் வீசித்தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தப் போரில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.
இந்த போரை நிறுத்துவதற்காக அமெரிக்காவும், பிரான்சும் சேர்ந்து ஒரு சமரசத்திட்டத்தை தயாரித்து, அதை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தனர். இந்த திட்டம் தீர்மானமாக நிறைவேற்றப்படும் நிலையில் இதை ஏற்க லெபனான் மறுத்துவிட்டது.
அரபு நாடுகள் எதிர்ப்பு
அரபு நாடுகளும், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறவேண்டும் என்ற வாசகம் கூட அந்த தீர்மானத்தில் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் அந்த வாசகத்தை தீர்மானத்தில் சேர்க்கவேண்டும் என்று அரபு நாடுகள் குழு வலியுறுத்தியது. இதை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டது. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக அமெரிக்காவும், பிரான்சும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் போர் காரணமாக உயிர்கள் பலியாவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற கவலையில் ரஷியா புதிய திட்டம் ஒன்றை வகுத்துஉள்ளது. 72 மணி நேரத்துக்கு போரை நிறுத்தக்கோரும் தீர்மானம் ஒன்றை, அது ஐ.நா.பாதுகாப்புக்கவுன்சிலில் அறிமுகப்படுத்தி உள்ளது.
போர் காரணமாக உணவு சப்ளை பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் இருக்க இடமின்றி, உணவு இன்றி சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை விநியோகிக்கவும் முடியவில்லை. நிவாரணப்பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்க தேவையான அவகாசத்தை வழங்குவதற்காக இந்த 72 மணிநேர போர்நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று ரஷியத்தூதர் விட்டலிசர்க்கின் கூறினார்.
இஸ்ரேல் ஏற்க மறுப்பு
இதற்கிடையில் ரஷியாவின் இந்த அமைதித்திட்டத்தை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. இப்படி போர்நிறுத்தம் செய்தால் அது ஹிஸ்புல்லாவுக்குத்தான் வசதியாகஇருக்கும். அவர்கள் மூச்சு விட அவகாசம் கொடுத்ததாகிவிடும் என்று இஸ்ரேல் எதிர்த்து உள்ளது.
இந்த நிலையில் நேற்றும் தாக்குதல் நீடித்தது. மஜயோன் நகரத்தை இஸ்ரேல் ராணுவம் பிடித்தது.