மாமனார் தாக்கியதால் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.!!
விழுப்புரம் மாவட்டம் சாத்தாம்பாடியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் ராஜகுமாரி. இவருக்கும், மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைபூண்டியை சேர்ந்த துரை (வயது 24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தனது மாமனார் பிரகாஷிடம், துரை ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த பணத்தை பிரகாஷ் திருப்பி கேட்டார். அதற்கு துரை எனது நிலத்தை விற்று உங்களது பணத்தை தருகிறேன் என்று கூறினார்.
ஆனால், பிரகாஷ் அந்த நிலத்தை நானே வாங்கி கொள்கிறேன் என்றார். நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டதாக தெரிகிறது. எனவே துரை அந்த நிலத்தை பிரகாசுக்கு கொடுக்கவில்லை. சிறுதலைபூண்டியை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் நேற்று இரவு தனது மருமகன் துரையை வீடு புகுந்து சரமாரியாக தாக்கினார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துரை இன்று காலை வளத்தி பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறினார். இங்கிருந்து குதித்து தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார்.
இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். வளத்தி போலீசாருக்கும், மேல்மலையனூர் தீயணைப்புதுறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். துரையை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர் எந்த சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே அவரது தாயாரிடம் போலீசார் மைக்கை கொடுத்து பேசுமாறு கூறினார்கள். அவர் தனது மகனை கீழே இறங்கி வருமாறு கூறினார். இதைத்தொடர்ந்து துரை கீழே இறங்கினார். மிகவும் களைப்பாக இருந்த அவர் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating