அறந்தாங்கி அருகே பட்டப்பகலில் ஓட்டல் தொழிலாளி படுகொலை..!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரமந்தூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராக்கன்-காளியம்மாள் ஆகியோரின் மகன் தேவதாஸ் (வயது 32).
தேவதாஸ் பரமந்தூரில் தனது சகோதரர் பாலகிருஷ்ணன், அவரது மனைவி மனிஷா ஆகியோருடன் கூட்டுக்குடும்பாக வசித்து வந்தார். சகோதரர் பாலகிருஷ்ணன் வெளிநாடு சென்றதால், தற்போது அவரது மனைவி மனிஷா, அறந்தாங்கி அருகே உள்ள ஆலங்குடியில் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
தேவதாஸ் சென்னையில் உள்ள ஒரு இடியாப்ப கடையில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் தேவதாஸ் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று மாலை தேவதாஸ், பரமந்தூரில் உள்ள அவரது வீட்டின் அருகே உறவினர் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தேவதாஸ் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து பேசிய தேவதாஸ், செல்போனில் பேசியபடி அறந்தாங்கி-ஆவுடையார் கோவில் மெயின் ரோட்டிற்கு சென்றார்.
அப்போது அவர் அருகே கார் ஒன்று வந்து நின்றது. தேவதாஸ் அந்த காரின் அருகே சென்றதும், அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள், தேவதாஸின் செல்போனை பறித்துக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு, அதே காரில் தப்பிச் சென்று விட்டனர்.
மர்ம நபர்களால் வெட்டப்பட்ட தேவதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன், ஆவுடையார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் தேவதாஸ் செல்போன் அழைப்பில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பகுதியில் அதே நேரத்தில் இணைக்கப்பட்ட செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அதில் தேவதாஸ் செல்போனுக்கு கடைசியாக ஆவுடையார் கோவில் உள்ள ஓட்டல் உரிமையாளரின் செல்போல் நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஓட்டல் உரிமையாளர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது வீடு மற்றும் ஓட்டல் பூட்டிக்கிடந்தது. மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது எண்ணை மீண்டும் ஆய்வு செய்தனர். அதில் தற்போது அவர் சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தேவதாஸின் உறவினர்களிடம் விசாரித்ததில் ஓட்டல் உரிமையாளருக்கும், தேவதாஸிற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும் தெரிய வந்தது. எனவே இந்த கொலை சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்று சிவகங்கை மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.
பட்டப்பகலில் ஓட்டல் தொழிலாளி நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating