காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி: ஸ்ரீநகரில் பதட்டம் – ஊரடங்கு…!!
காஷ்மீரில் 12 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டில் பலியானதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் 7 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் கமாண்டர் பர்கான்வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது. ராணுவத்துக்கும் போலீசுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள், கல்வீச்சு மோதல் சம்பவங்கள் நடந்தன.
கலவரம் பல மாதங்கள் நீடித்தது. இதில் 90 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். ஊரடங்கு உத்தரவும் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை ஸ்ரீநகர் செட்போரா என்ற இடத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 வயது சிறுவன் ஜூனைத் அகமது பலியானான். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த சிறுவன் மீது பெல்லட் வகை குண்டுகள் சரமாரியாக சீறிப்பாய்ந்து வந்து தாக்கின. இதில் தலை, மார்பு பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தன. உடனே சிறுவன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் செல்லப்பட்டான். அங்கு பலியானான்.
இதைக் கண்டித்து ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதனால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் 7 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Average Rating