வாணியம்பாடியில் வாலிபர் அடித்துக் கொலை…!!
வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 23). விவசாயி. ஈஸ்வரனுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஈஸ்வரனுடன் வாழ விருப்பம் இல்லை எனக்கூறி விவாகரத்து கேட்டு அவரது மனைவி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்வரன் சொந்த வேலையாக நேற்றிரவு பைக்கில் வாணியம்பாடி நோக்கி வந்தார். பிறகு, வீட்டிற்கு திரும்பினார்.
சென்னை-பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள பெருமாள் பேட்டை என்ற பகுதியில் சென்றபோது, ஈஸ்வரனை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்துள்ளனர். மேலும் அவரை, கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
இதையடுத்து கொலை கும்பல், ஈஸ்வரனின் உடலை பைபாஸ் சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இன்று காலையில், அந்த வழியாக வாக்கிங் சென்ற சிலர், கிணற்றில் பிணம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாணியம்பாடி தீயணைப்பு துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் கிடந்த உடல் மீட்கப்பட்டது.
விசாரணையில், கொத்தக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஈஸ்வரன் என்பதும், மர்ம கும்பல் அவரை அடித்துக் கொன்று கிணற்றில் உடலை வீசியது போலீசாருக்கு தெரியவந்தது. ஈஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கொலை செய்தவர்கள் யார்? சம்பவம் குடும்ப விவகாரத்தில் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating