வவுனியாவில் பழைய மாணவர்கள் உண்ணாவிரதம்..!!
வவுனியா- நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்குள் அதிபருக்கான விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு ஒரு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பழைய மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் முன்பாக இன்று காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் பாடசாலைக்கென ஒதுக்கப்பட்ட குறித்த நிதி திரும்பிச் செல்லா வகையில் வேறு ஒரு இடத்தில் அதிபருக்கான விடுதியை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், பாடசாலை மைதானத்திற்குள் விளையாட்டு நிகழ்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடுதி அமைக்கும் வேலைகளை உடனடியாக நிறத்த வேண்டும், நீண்டகாலமாக தெரிவு இன்றி இருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்தை நடத்தி நிர்வாகத் தெரிவை மீளச் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதேவேளை, பழைய மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்று தெரிவு இடம்பெற வேண்டும், மைதானத்திற்குள் விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பழிவாங்கப்படக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வருகை தந்துள்ளார்.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்களுடனும், அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எதிர்வரும் புதன் கிழமை (12.10) பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலையில் பாடசாலை நிர்வாகம், அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், உயர்தர மாணவர்கள், பெற்றோர்கள், வவுனியா மாவட்ட மாகாணசபை உறப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் கூடி இது தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதுவரை கட்டட நிர்மாண வேலைகளை நிறுத்துவதாகவும் பொலிஸ் அதிகாரி மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Average Rating