வாசனை திரவிய பெண் தொழில் அதிபர் கொலை வழக்கில் பஞ்சாப்பை சேர்ந்தவர் கைது…!!
கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மோனிகா குர்தே (வயது 39). வாசனை திரவியம் தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்தார். சென்னையில் 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை நிறுவனம் நடத்தி வந்தார்.
கணவரை பிரிந்து, கோவா தலைநகர் பனாஜி அருகே ஒரு வாடகை குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அங்கு 6-ந் தேதி, கை-கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வீட்டில் பெரிய அளவில் கொள்ளை எதுவும் நடக்கவில்லை.
பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. ஆனால், அவர் கற்பழிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூருவில் நேற்றுமுன்தினம் இரவு ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் ராஜ்குமார் சிங். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரு போலீஸ் உதவியுடன் அவரை கோவா போலீசார் கைது செய்தனர். நேற்று கோவாவுக்கு அழைத்து வந்தனர்.
கொலைக்கு பிறகு, மோனிகாவின் ஏ.டி.எம். கார்டை கொலையாளி எடுத்துச்சென்று விட்டதை போலீசார் ஏற்கனவே கண்டுபிடித்து இருந்தனர்.
எனவே, அந்த கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்து வந்தனர். அந்த கார்டு, மராட்டிய மாநிலம் மிராஜ், நாசிக் ஆகிய ஊர்களிலும், பிறகு பெங்களூருவிலும் பயன்படுத்தப்பட்டதை போலீ சார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், ராஜ்குமார் சிங்கை கைது செய்தனர்.
மேலும், பெண் தொழில் அதிபர் மோனிகா குடியிருந்த குடியிருப்பின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலை செய்யப்படுவதற்கு முன்பு, கடந்த 5-ந்தேதி இரவு 7.30 மணியளவில், மோனிகா தன்னுடைய சகோதரர் ஆனந்துடன் கடைசியாக செல்போனில் பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மோனிகாவை 5-ந்தேதி பிற்பகலில் ஒரு காபி ஷாப்பில் ஒரு பிரபல தொழில் அதிபர் சந்தித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
Average Rating