அச்சுவேலி இரட்டைக் கொலை சம்பவம் : 16 படையினர்கள் விளக்கமறியலில்…!!
கடந்த 1998ம் ஆண்டு 2 இளைஞர்களை கைது செய்து காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 11 இராணுவத்தினரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டு அச்சுவேலிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த 16 இராணுவத்தினர் அப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் காணாமல் போய்விட்டதாக ஆதாரங்களுடன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கடந்த 1999ம் ஆண்டு வரை வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பின்னர் வழக்கு நடைபெறவில்லை.
இந்த வழக்கு தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் குறித்த வழக்கினை கொலைக்குற்ற வழக்காக விசாரணை செய்யுமாறு அச்சுவேலி பொலிஸாருக்கும் யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம், கைதுசெய்த 16 இராணுவத்தினருக்கும் யாழ்.நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதன் பிரகாரம் கடந்த மாதம் 5 இராணுவத்தினர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
கடமையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இருந்த குறித்த 5 பேரும் கடந்த மாதம் 26ம் திகதி யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜராகிய போது, 5 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதுடன், ஏனைய 11 பேரையும் அடுத்த வழக்கின் போது, மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு அச்சுவேலி பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஏனைய 11 பேரையும் அச்சுவேலி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை ஆஜர்ப்படுத்திய வேளையில், எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating