ஆயுத பூஜையில் துப்பாக்கி, கத்தி வைத்து வழிபாடு செய்தது ஏன்? அர்ஜுன் சம்பத் விளக்கம்…!!
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத். கோவையை சேர்ந்த இவர், ஆயுத பூஜையையொட்டி 2 துப்பாக்கிகள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை கோவையில் உள்ள தனது வீட்டில் வைத்து ஆயுத பூஜை நடத்தினார். இதுதொடர்பான படம் அவரது முகநூலில் வெளியிடப்பட்டது. இதற்கு மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-
என் மகன் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து (ரைபிள் கிளப்) பயிற்சி பெற்று வருகிறான். அந்த பயிற்சிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை நடைபெற்றது. ஆயுதபூஜை கொண்டாடுவது என் உரிமை. இந்த படம் வெளியான அரை மணிநேரத்துக்குள் சிலர் வேண்டும் என்றே பெரிதுபடுத்தி பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
என்னையும், இந்து அமைப்புகளையும் தவறாக சித்தரிப்பதற்காக இதுபோன்ற பிரச்சினையை கிளப்பி போலீசில் புகார் செய்கிறார்கள். தேவைப்பட்டால் நான் இதுபற்றி போலீசில் புகார் செய்வேன்.
இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.
இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வருவதாக கோவை நகர போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
Average Rating