இந்தியாவில் கண்ணாடி மேற்கூரைகளுடனான ரெயில் பெட்டிகள் அறிமுகம்: இந்திய ரெயில்வே முடிவு…!!
தமிழகத்தின் பெரம்பூர் நகரில், இந்திய ரெயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.), ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ.) மற்றும் ஒருங்கிணைந்த பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ஐ.சி.எப்.) ஆகியவை ஒன்றிணைந்து இந்த ஆடம்பர பெட்டிகளை வடிவமைக்கின்றன.
இந்த கண்ணாடி மேற்கூரைகளுடனான ரெயில் பெட்டிகள் வருகிற டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். தொடக்கத்தில் ரூ.4 கோடி மதிப்பில் இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். முதல் பெட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ரெயிலில் இணைக்கப்படும். அதேவேளையில் மற்ற 2 பெட்டிகள் விசாகப்பட்டினத்தில் அரக்கு பள்ளத்தாக்கு வழியே செல்கிற ரெயில்களில் இணைக்கப்படும்.
இது பற்றி ஐ.ஆர்.சி.டி.சி.யின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஏ.கே. மனோச்சா கூறும்பொழுது, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் சில ரெயில்களில் கண்ணாடி மேற்கூரை உள்ளது. இது சுற்றுலாவாசிகளுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
இது போன்ற பெட்டிகள் இந்தியாவில் ரெயில்வே சுற்றுலா மேம்படுவதற்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார். இந்த பெட்டிகளில் கால் நீட்டி கொள்வதற்கு வசதி இருக்கும். சுற்றுலாவாசிகளின் நன்மைக்காக நவீன பொழுதுபோக்கு மற்றும் தகவல் சாதனமும் அமைக்கப்படும். பெட்டி வடிவமைப்பிற்காக கடந்த 2015ம் ஆண்டில் தொடர்ச்சியான கூட்டங்கள் நடத்தி இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த மாதத்தில் (அக்டோபர்) முதல் பெட்டி உருவாக்கப்பட்டு விடும். சுழலும் நாற்காலிகளுடன் அதிக ஆடம்பரத்துடன் பெட்டிகள் இருக்கும். இதனால் பகுதி அளவிலான கண்ணாடி மேற்கூரையுடன் உள்ள பெட்டியின் வழியே பயணிகள் வானத்தினை காண முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. குழு பொது மேலாளர் தம் கஜ பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Average Rating