கிளிநொச்சியில் மாடுகளை இலக்கு வைக்கும் திருட்டுக்கும்பல்…!!
கிளிநொச்சியின் பல இடங்களில் மாடுகளை இலக்கு வைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக விஸ்வமடு , அம்பாள் குளம் பகுதிகளில் மாடுகளை திருடி அவற்றை இறைச்சியாக்கி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
அதேபோல் இன்று அதிகாலை அம்பாள்குளம் காட்டுப்பதியில் திருடப்பட்ட பசு மாடொன்றினை அக்கிராமத்தில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில் இறச்சியாக்குவதற்கு முற்ப்பட்ட திருட்டுக்கும்பல் ஒன்று, மக்கள் நடமாடியதனை அடுத்து குறித்த மாட்டினை கொலை செய்த நிலையில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அம்பாள்குளம் பகுதிகளில் மட்டும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாடுகள் திருட்டுப் போயுள்ளதுடன், 30க்கும் மேற்ப்பட்ட மாடுகளை அக்கிராமத்தின் காட்டுப்பகுதியில் இறைச்சியாக்கியதர்கான தடயங்கள் இருப்பதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அக்கிராமத்தைச் சேர்ந்த 38 கிராம வாசிகளால் மாடுகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு கிளிநொச்சிப் பொலிசார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் தமது வாழ்வாதாரம் மாடு வளர்ப்பதிலையே இருப்பதாகவும், அதிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இத்திருட்டுச் சம்பவங்களிற்கு ஒரு முடிவினை பெற்றுத்தருமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating