ரத்துபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவம் குற்றமாகும் – நீதிமன்றம் அறிவிப்பு…!!
2013ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டம், வெலிவேரிய அருகில் அமைந்துள்ள ரதுபஸ்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தண்டனைக்குரிய குற்றமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மஹிந்த ஆட்சியின் போது ரதுபஸ்வெல பிரதேச மக்கள் தங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் முக்கிய பிரமுகராக இருந்தவரும், ராஜபக்ஸ குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான தம்மிக பெரேராவின் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியிடப்படும் கழிவு நீர் காரணமாக ரதுபஸ்வெல பிரதேச நிலத்தடி நீர் மாசுபட்டிருந்தது.
இதன் காரணமாகவே அங்குள்ள பொதுமக்கள் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மஹிந்த அரசாங்கம் இராணுவத்தினரைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தது. இதன் காரணமாக மூவர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் பதவியேற்பின் பின்னர் ரதுபஸ்வெல சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டிருந்த விசேட குழுவின் அறிக்கை இன்று கம்பஹா பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர்களில் இருவர் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், இன்னொருவர் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினாலும் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையின் அடிப்படையில் ரதுபஸ்வெல சம்பவம் தண்டனைக்குரிய குற்றமாக கம்பஹா நீதிபதி காவிந்தியா நாணயக்காரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ரதுபஸ்வெல சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Average Rating