இஸ்ரேல்- லெபனான் நாளை போர் நிறுத்த ஒப்பந்தம்: 33 நாள் சண்டை ஓய்கிறது
2 இஸ்ரேல் வீரர்களை லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.லெபனானின் பெய்ரூட் நகரம் உள்பட ஏராளமான நகரங்கள் குண்டுவீச்சில் தரை மட்டமாகி விட்டன. தெற்கு பகுதியில் இஸ்ரேலின் தரைப்படை புகுந்து முக்கிய நகரங்களை பிடித்தது. கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கிய இந்த தாக்குதல் இன்று 33-வது நாளாக நீடித்தது.
இதில் லெபனானின் 1000 பொதுமக்கள் பலியாகி விட்டனர். லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் நடத்திய ராக்கெட் தாக்குதலை இஸ்ரேலின் வீரர்கள் 90 பேர் பலியானார்கள்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. போரை உடனடியாக நிறுத்தும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதை அடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அனன் நாளை இஸ்ரேல்-லெபனான் நாடுகளின் பிரதமர்களை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையே நேரடி ஒப்பந்தம் ஏற்படுகிறது.
போர் நிறுத்தத்தை கண்காணிக்க 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.நா. அமைதிப்படை இஸ்ரேல்-லெபனான் எல்லைக்கு அனுப்பப்படுகிறது. இதை அடுத்து 33 நாட்களாக நடந்த போர் நாளை ஓய்கிறது. போர் நிறுத்தம் ஏற்படுவதை தொடர்ந்து லெபனானின் தெற்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 30 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் வாபஸ் பெறுகிறது.
நாளை காலை 7 மணி முதல் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்ட பிறகும் இஸ்ரேலின் விமானப்படைகளும், பிரேங்கிகளும் லெபனானின் பல்வேறு நகரங்களில் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இன்றும் இந்த தாக்குதல் நீடித்தது.
தெற்கு எல்லையில் யாதர் கிராமத்தில் குண்டு வீசிய இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசி தாக்கினார்கள். இதில் அந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 2 இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டனர்.