சீனாவில் புயலுக்கு பலி 300 ஆக உயர்வு
சீனாவில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் கடும் புயல் வீசியது. `சவோமாய்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சிஜியான், புஜியான் ஆகிய மாகாணங்களில் கடுமையாக தொடர்ந்து 2 நாட்களாக இந்த புயல் கோரத் தாண்டவம் ஆடியது. முதல் நாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த புயலுக்கு பலியாகி விட்டனர்.
2-வது நாளாக புயல் தொடர்ந்து வீசியதாலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததாலும், நிலச்சரிவிலும் மண்ணில் புதைந்தும் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதைத் தொடர்ந்து புயல் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டி விட்டது.
புயல் மழைக்கு 15 லட்சம் பேர் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் தவிக்கிறார்கள். இன்னும் 149 பேரை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
சீனாவில் இதுவரை வீசிய புயல்களில் `சவோமாய்’ புயல்தான் மிகக்கடுமையாக தாக்கியுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் இந்த புயல் பொருள் சேதத்தை ஏற்படுத்தி விட்டது.
இன்னும் 2 நாட்களுக்கு இந்த புயல், மழை நீடிக்கும் என வானிலை இலாகா எச்சரித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் `பிலிஸ்’ என்ற புயல் தாக்கியதில் 600 பேர் பலியானதுடன் பலத்த சேதமும் ஏற்பட்டது.