அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தியவர்களை பிடிக்க நாகை, நாகூரில் தனிப்படை போலீசார் விசாரணை…!!
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே உள்ள தெரணிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி சரண்யா (வயது 23). இவர் 2-வது பிரசவத்துக்காக கடந்த 6-ந் தேதி அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.
அப்போது அங்கிருந்த ஒரு ஆண், ஒரு பெண், 10 வயது சிறுவன் ஆகியோர் சரண்யாவிடம் நெருங்கி பழகினர். சிறிது நேரத்தில் அந்த 3 பேரும் சரண்யாவை ஏமாற்றி விட்டு அவரது 2 வயது மகள் சாதனாவை கடத்தி சென்று விட்டனர்.
இது குறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமிராவில் குழந்தைகளை கடத்தி சென்றவர்கள் படம் பதிவாகி இருந்தன. இந்த படங்களை போலீசார் வெளியிட்டனர். ஆனால் கேமிராவில் கடத்தியவர்களின் முகங்கள் சரியாக தெரியவில்லை. இதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து திருச்சி, மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையம், புத்தூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 3 பேரும் சம்பவத்தன்று காலை ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் நடந்து சென்றது பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த படங்களை போலீசார் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் நாகப்பட்டினம், நாகூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. ரெயில் மூலம் அவர்கள் திருச்சி வந்து சென்றுள்ளனர். எனவே தனிப்படை போலீசார் அங்கு சென்று முகாமிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Average Rating