திருச்சி அருகே விபத்து: டேங்கர் லாரி மோதி டிரைவர்கள் 2 பேர் பலி…!!
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று பால் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த லாரி முசிறி சாலையில் திருவாசி பாலம் அருகே வந்தது.
இதற்கிடையே அதே பகு தியில் உள்ள மணல் குவாரியில் மணல் ஏற்றுவதற்காக லாரி டிரைவர்களான ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை அடுத்த கொம்பேறிப்பட்டி ஜங்கிள்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் வந்திருந்தனர்.
மணல் எடுக்க நீண்ட நேரம் ஆகும் என்பதால் லாரியை நிறுத்திவிட்டு ஒரு மோட்டார்சைக்கிளில் சாப்பிடுவதற்காக நொச்சியம் நோக்கி இருவரும் புறப்பட்டனர். அவர்கள் திருவாசி பாலத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக பின்னால் வந்த ஆவின் டேங்கர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன், சக்திவேல் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்கள் மீது மோதிய லாரி தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடி எதிரே மொபட்டில் வந்த துறையூரை சேர்ந்த வீரமலை (65) என்பவர் மீதும் மோதியது.
படுகாயம் அடைந்த வீரமலை உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக நள்ளிரவில் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Average Rating