மியான்மர் நாட்டில் பாரம் தாங்காமல் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி – பலர் மாயம்…!!
மியான்மர் நாட்டில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர்.
சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால் பணத்துக்கு ஆசைப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை படகோட்டிகள் ஏற்றிச் செல்கின்றனர்.
பொதுமக்களும் இதில் உள்ள ஆபத்தைப்பற்றி கவலைப்படாமல், எப்படியாவது அக்கரைக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற அவசரத்தில் இதுபோன்ற படகுகளில் ஏறி, தங்களது உயிருக்கு உலை வைத்துக் கொள்கின்றனர்.
அவ்வகையில், மியான்மர் நாட்டின் வடமேற்கில் உள்ள ஹோமாலின் பகுதியில் இருந்து மோனிவா நகரை நோக்கி சின்ட்வின் ஆற்றின் வழியாக சென்ற பயணிகள் கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் மியான்மர் நாட்டின் முன்னாள் தலைநகரான மண்டலே அருகாமையில் உள்ள கானி என்ற இடத்தின் அருகே நீரில் கவிழ்ந்தது.
120 பேரை மட்டுமே ஏற்றிச்செல்லும் திறன்கொண்ட அந்தப் படகில் சுமார் 300 பேர் ஏறிச்சென்றதால் பாரம் தாங்காமல் அந்தப் படகு ஆற்றில் கவிழ்ந்ததாக தெரிகிறது.
இந்த விபத்து பற்றிய தகவல் வெளியானதும் ஆற்றுக்குள் மூழ்கிய படகை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இன்றுகாலை நிலவரப்படி, ஆற்றுநீரில் சிக்கித்தவித்த சுமார் 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 14 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான படகில் சென்ற மேலும் 85 பேரை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என அப்பகுதியை சேர்ந்த பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating