சிறைச்சாலைக்குள் நடக்கும் மர்மங்கள்! ஏற்படப் போகும் அனர்த்தங்களுக்கு யார் பொறுப்பு…!!
அரசியலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நீதிமன்றினால் குற்றவாளியென சிறைத்தண்டனை வழங்கும் போது, குறித்த நபர் சிறைச்சாலைக்கு சென்றவுடன் அடுத்த நாள் வைத்தியசாலைக்கு செல்லும் புதிய கலாசாரம் ஒன்று தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
தற்போது கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளமையை காண முடிகிறது.
பாரத பிரேமசந்திர கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அதற்கான சிறந்த உதாரணமாக கூறப்படுகின்றது.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு பெருமளவு செலவிட்டு போலி அறிக்கைகள் தயாரிக்கப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் பணத்தை கொள்ளையடித்தமை, கொலை செய்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் சிறைச்சாலை செல்லும் குற்றவாளிகள் இவ்வாறு பணத்தை செலவிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் பணமில்லாத கைதிகள் எங்கு செல்வார்கள் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. சிறை சென்றாலும் சொகுசான வாழ்க்கை வாழ முடியும் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டால் சட்டம் தொடர்பில் உள்ள நம்பிக்கை இல்லாமல் போய்விடும். அத்துடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Average Rating