ஐஸ்வர்யாராய் படத்திற்கு தடை: அனுராக் காஷ்யப், அலியாபட் எதிர்ப்பு..!!
ஐஸ்வர்யாராய்- ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ள இந்தி படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்’. இந்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவத்கானும் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உரி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர்கள், கலைஞர்கள் இடம் பெற்ற படங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பேரில் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தையும் வெளியிட இந்திய தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை விதித்து உள்ளது.
இந்த முடிவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேலியாக கருத்து தெரிவித்து உள்ள பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப், “ இந்த உலகம் எங்களை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். படங்கள் மீது குற்றம் சுமத்தி தடை விதிப்பதின் மூலம் அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நாங்கள் விடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.
இதேபோல் நடிகை அலியாபட் கூறுகையில், “ இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். இதைவைத்து தனிப்பட்ட முறையில் சொன்னால் இது மிகவும் அழகான, உணர்ச்சிகரமான படம். இந்த படத்திற்கு எதிராக தியேட்டர் அதிபர்கள் சங்கம் எடுத்திருக்கும் முடிவு முற்றிலும் நியாயமற்றது.
காரணம் இந்த சினிமாவின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நடந்தது. ஆனால் உரி தாக்குதல் சம்பவம் சமீபத்தில் ஏற்பட்டது. இதை காரணம் காட்டி படத்திற்கு தடை விதிப்பது தவறு” என்றார்.
நடிகை ஷ்வரா பாஸ்கர் கூறுகையில், “ தவறாக வழிநடத்தப்படும் உணர்வுகளால் இந்தியாவில் சினிமாக்கள் எவ்வாறு வர்த்தக ரீதியாக பாதிக்கப்படுகிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. இவர்களில் எத்தனைபேர் படங்களுக்கு தடைவிதிப்பது, புறக்கணிப்பதை தவிர்த்து நம் ராணுவத்திற்காக தானாக முன்வந்து தங்கள் உண்மையான பங்களிப்பை தந்தார்கள் என்பது தெரியவில்லை ” என்றார்.
Average Rating