மாணவர்கள் படுகொலை! நீதியான விசாரணையை கோருகிறது யாழ்.பல்கலை.ஆசிரியர் சங்கம்…!!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை சம்பவத்தில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
நேற்றைய தினம் யாழ்.குளப்பிட்டி பகுதியல் இடம்பெற்ற பொலிஸாருடைய துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.
இந்த கலந்துரையாடலின் பின் ஊடக ங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி சரவணபவன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மாணவர்களுக்கு இடம்பெற்ற சம்பவமானது படுகொலை சம்பவமாக பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்நிலையில் இதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாதுடன், இதனை பல்கலைகழக சமூகமானது வன்மையாக கண்டிக்கின்றது.
ஏனைய இடங்களில் இடம்பெறுகின்ற சாதாரண நிகழ்வு போன்று இதனை அதனோடு ஒப்பீட்டு பார்த்து விட்டுவிடவும் முடியாது.
எனவே இச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
Average Rating