நள்ளிரவில் யானையை பார்த்த அதிர்ச்சியில் பெண் பலி…!!
வால்பாறை அருகே வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட சிறுகுன்றா எஸ்டேட் கீழ்பிரிவு மாட்டுப்பட்டி தேயிலைத் தோட்ட பகுதியும் தொழிலாளர்கள் குடியிருப்பும் உள்ளது.நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சிறுகுன்றா எஸ்டேட் வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்ட பகுதிக்குள் ஒற்றை காட்டுயானை வந்துள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இந்த ஒற்றை காட்டுயானை குடியிருப்பிலிருந்த தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளது. பின்னர் வீட்டில் தனியாக இருந்த ஈஸ்வரி (வயது 55) என்ற பெண்ணின் வீட்டு கதவை காட்டுயானை தள்ளியது. யாரோ கதவை தட்டுகின்றார்கள் என்று ஈஸ்வரி படுக்கை அறையிலிருந்து முன்பக்க அறைக்கு வந்து பார்த்தார்.
அப்போது ஓற்றை காட்டு யானை வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்ததை பார்த்துள்ளார். யானையை பார்த்து பயந்த அதிர்ச்சியில் படுக்கை அறைக்கு மீண்டும் ஓடிச்சென்ற ஈஸ்வரி படுக்கையில் விழுந்து இறந்து விட்டார். பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றவுடன் அருகில் இருந்தவர்கள் ஈஸ்வரியின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.அப்போது ஈஸ்வரி படுக்கையில் சாய்ந்த படி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை வனச்சரக வனத்துறைக்கும், எஸ்டேட் நிர்வாகத் தினருக்கும் வால்பாறை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியன், வால்பாறை வனச்சரக அலுவலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating