ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு…!!
சென்னை சூளைமேட்டை சேர்ந்த வரதராஜன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை கடந்த 7-ந்தேதி பார்ப்பதற்கு சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் ஒன்றில் டிக்கெட் முன் பதிவு செய்தேன். அப்போது என்னிடம் ரூ.120 வசூலிக்கப் பட்டது. இந்த டிக்கெட் வாங்கிய பின்னர்தான், இந்த படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை வழங்கி யிருப்பது எனக்கு தெரிய வந்தது.
தமிழ் மொழியையும், தமிழ் சினிமாவையும் ஊக்குவிக்க பல சலுகைகளை தமிழக அரசு கடந்த 2005-2007ம் ஆண்டுகளில் அறிவித்தது.அதன்படி, தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு முழுமை யான வரி விலக்கை தமிழக அரசு அளித்தது.
ஆனால், ‘ரெமோ’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தையே இல்லை. இது ஒரு லத்தீன் வார்த்தையாகும். தமிழக வணிகவரித்துறையின் முதன்மை செயலாளராக இருக்கும் சந்திரமவுலிதான், அதே துறையின் கூடுதல் தலைமை செயலாளராகவும் உள்ளார். இரு பதவிகளையும் அவரே வகிப்பதால், ‘ரெமோ’ என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று நன்கு தெரிந்து இருந்தும் இந்த திரைப்படத்துக்கு வரிச்சலுகையை வழங்கியுள்ளார். அவர் தன் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
இதனால், வரியாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பெரும்தொகையை அரசுக்கு செல்லாமல், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு செல்கிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே, ‘ரெமோ’ படத்துக்கு வரிச்சலுகை வழங்கி தமிழக வணிகவரித்துறை முதன்மை செயலாளர் கடந்த 6-ந்தேதி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவக்கு வரிவான பதில் மனுவை தமிழக வணிக வரித்துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை நவம்பர் 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Average Rating