பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள்…!!
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனைகள் விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அதிக பட்சமாக 20 ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் சொத்துக்களை அரசுடமையாக்குதல் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொண்டவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்க புதிய சட்டத்தில் ஆவண செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டன் பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்திற்கு நிகரான வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
வெளிநாடுகளுக்கான இலங்கை தூதரகங்களுக்கு எதிராக அல்லது வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு எதிராக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இலங்கை தொடர்பிலான இரகசிய தகவல்களை திரட்டுவதும் பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இல்லாத சில புதிய சரத்துக்களும் புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating