இங்கிலாந்து விமானம் பாதியில் திரும்பியது கேட்பாரற்று கிடந்த செல்போனால் பரபரப்பு
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து நிïயார்க் நகருக்கு புறப்பட்ட விமானம் ஒன்று கேட்பாரற்று கிடந்த செல்போனால் பாதுகாப்பு காரணமாக மீண்டும் லண்டன் நகருக்கே திரும்பியது. தீவிரவாதிகள் திரவ வடிவிலான வெடி மருந்துகளை பயன்படுத்தி அமெரிக்கா செல்லும் 10 விமானங்களை தகர்க்க சதி செய்தது தெரியவந்தது. இதனால் அந்த நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அமெரிக்கா புறப்பட்ட விமானத்தில் கிடந்த செல்போன் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
விமானத்தில் இருந்த 217 பயணிகளும் அது தங்களுக்கு சொந்தமானது இல்லை என்று கூறிவிட்டனர். ரசாயன திரவ வெடி பொருளை செல்போன் மூலம் தான் வெடிக்க வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர். இதனால் பயணிகளிடம் பீதி ஏற்பட்டது.
லண்டன் விமான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விமானத்தை திருப்பிக்கொண்டுவருமாறு உத்தரவிட்டனர். அதன்படி விமானம் பாதிவழியில் லண்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அது லண்டனில் தரை இறங்கியதும் தனி இடத்தில் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. அது ஆபத்து இல்லாதது என்றும், யாரோ தவறவிட்டு விட்டார் என்பதும் தெரியவந்தது.